Thursday, January 28, 2010

சரத் பொன்சேகாவின் மருமகனை 27ம்திகதிக்கு பின் விசாரிப்போம்.. -சி.ஐ.டி.பணிப்பாளர்

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தனியார் தொலைக்காட்சியொன்றில் வழங்கியுள்ள பேட்டியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியதாக தெரிவித்திருக்கும் கருத்தினை அதன் பணிப்பாளர் எம்.கே.டி. விஜய அமரசிங்க நேற்று மறுத்துள்ளார். கட்சி, மத, சமய பேதமின்றி சி.ஐ.டி. பிரிவு செயற்பட்டு வருகிறது. அரசியல் இலாபத்துக்காக சிலர் சி.ஐ.டி.யினர் மீது அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கும் கருத்துகளால் பொதுமக்களிடையே நம்பகத்தன்மை குறைய இடமுண்டு. இருப்பினும், பொன்சேகா கூறியிருக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமிருக்க வாய்ப்பில்லையெனவும் சி.ஐ.டி.பணிப்பாளர் விஜய சமரசிங்க நேற்று தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகமத்திய நிலையத்தில் நேற்றுமாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பணிப்பாளர் விஜய அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்;, சி.ஐ.டி.யினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய கொழும்பு மற்றும் அமெரிக்காவில் அமையப் பெற்றிருக்கும் ஹை கோர்ப் நிறுவனம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய, 109வது சட்டமூலத்தின் 06வது உபபிரிவின்படி விசாரணைகளுக்கான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக வேட்பாளர் பொன்சேகாவின் மருமகனான தனுன திலக்கரட்ணவை விசாரணைகளுக்காக சி.ஐ.டி.க்கு வருகைதருமாறு கடிதம் ஒன்றை கடந்த 19ம் திகதி அனுப்பிவைத்தோம். அதில் 20ம் திகதிகாலை சமுகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், 20ம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் வேலைப்பளு காரணமாக விசாரணையை மறுஅறிவித்தல் வரை ஒத்திவைத்திருப்பதாக குறிப்பிட்டு எனது கையொப்பத்துடன், தபாலை பொலிஸ் அதிகாரியொருவரூடாக தனுன திலக்கரட்ணவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். நான் அதனை 10மணிக்கு அனுப்பி வைத்த அதேநாள் 11.45 மணியளவில் தனுன திலக்கரட்ணவிடமிருந்து எனக்கொரு தொலைநகல் கிடைத்தது. அதில் அவர், தனது மாமாவுடன் தேர்தல் வேலையில் ஈடுபட்டிருப்பதனால் 26ம் திகதிக்கு பின்னரே விசாரணைக்காக சமூகமளிக்க முடியுமெனக் குறிப்பிட்டிருந்தார். தேர்தலைப் பொறுத்தவரை இது முக்கிய விசாரணையாக மதிக்கப்பட்ட போதிலும் சி.ஐ.டி.யைப் பொறுத்தவரை இது அவ்வளவு முக்கியமானதல்ல. எனவே, எதிர்வரும் 26ம் திகதிக்குப் பின்னர் இது குறித்து தினம் ஒன்றை ஒதுக்கவோமென நான் எனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தேன். அதற்கிடையில், சி.ஐ.டி.யைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் விசாரணைக்காக பொன்சேகாவின் மருமகனை இங்கே வரவழைப்பதனை விட எனது சீருடையை களைந்துவிட்டு வீடு செல்லலாம் என கூறியதாக பொன்சேகா செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் சி.ஐ.டி. பணிப்பாளராக பதவியேற்ற இரண்டுமாதக் காலப்பகுதிக்குள் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பாகவும் நன்கு அறிந்து வைத்துள்ளேன். அதேவேளை, நாம் கட்சி பேதமின்றி செயற்படும் ஒரு நிறுவனம் என்பதனையும் பொதுமக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment